நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் முழுமையாக வென்று, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நன்றி காணிக்கை செலுத்துவோம் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழாக் குழு உறுப்பினர்கள் – அணிச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
150 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளைத் தனது 80 ஆண்டு கால பொதுவாழ்வில் ஓய்வின்றி உழைத்து நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரது நூற்றாண்டை திமுக சார்பிலும், அவரது வழியில் நடக்கும் நமது திராவிட மாடல் அரசின் சார்பிலும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம்.சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் முதல், குமரி முனையில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை வரை தமிழ்நாடெங்கும் பண்பாட்டு அடையாளங்களை உருவாக்கியவர் கலைஞர்.
மினி பஸ், மெட்ரோ ரயில், டைடல் பார்க், உழவர் சந்தை, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் – என நாம் பட்டியலிடத் துவங்கினால் இன்று முழுவதும் பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம். இப்படி திட்டங்கள் பல தீட்டி ஒவ்வொரு தமிழரும் சுயமரியாதையுடன் வாழ ஓயாது பாடுபட்டவர் கலைஞர்.
இந்தியாவுக்கே முன்னோடியாக அவர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை தான், ஒன்றிய அரசுகள் நடைமுறைப்படுத்தின. இப்போதும் நடைமுறைப்படுத்துகின்றன. இப்படிப்பட்ட தலைவரின் வரலாற்றை மறைக்க, திரித்து எழுதும் கூட்டத்திடமிருந்து, உண்மை வரலாற்றை நாம் காப்பாற்றிட வேண்டும் என்றால், திரும்பத் திரும்ப முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உழைப்பை, போராட்டத்தை, சாதனைகளைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் முழுமையாக வென்று, 2024 ஜூன்-3 அன்று, நூற்றாண்டு நாயகர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அவர் பிறந்தநாளில் நன்றிக் காணிக்கை செலுத்துவோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.