நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜகவிற்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் முன்னெடுத்துள்ளார். இது தொடர்பாக தேசிய தலைவர்கள், பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்களை நிதிஷ்குமார் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நிதிஷ் குமாரின் முன்னெடுப்பிற்கு பெருவாரியான எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், வரும் 12 ஆம் தேதி பாட்னாவில் எதிரகட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று ஐக்கிய ஜனதா தளம் அறிவித்திருந்தது. ஆனால் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அன்றைய தினம் பங்கேற்பதில் சிக்கல் இருப்பதாக கூறப்பட்டது. மேலும் அமெரிக்காவிற்கு சென்றுள்ள ராகுல் காந்தி, வரும் 18 ஆம் தேதி நாடு திரும்புவதால் அவரும் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், எதிர்கட்சி தலைவர்களின் கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் லாலன் சிங் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.