தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 18-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
ஆனால் தற்போது அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்பட்டது. அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் விஜயகாந்தின் உடல் நிலை, ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது எனவும், தொடர்ந்து ஒரு நேரம் போல் மற்றொரு நேரம் அவருடைய உடல் நிலை இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சளி அதிகமாக உள்ளதால் சுவாசத்தில் அவ்வப்போது சிரமம் ஏற்படுகிறது. தொடர்ந்து உடல் நிலை சோதனை செய்ய இடை விடாது மருத்துவ குழு கண்காணிப்பில் இருந்து வருகிறது. அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை தற்போது அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், விரைவில் உடல்நிலை தேறிவிடுவார் எனவும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இரு நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.