தமிழக காவல்துறையினரை தாக்கும் அளவிற்கு சட்டம் –ஒழுங்கினை சீரழிக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை அம்பத்தூரில் காவலர்களை வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கும் சம்பவம் அதிர்ச்சியும், கடும் கோபத்தையும் ஏற்படுத்துவதாக கூறியுள்ள சீமான், வடமாநிலத் தொழிலாளர்களால் விரட்டி விரட்டி தாக்கப்படும் அளவிற்கு தமிழ்நாட்டு காவல்துறை தரம் குறைந்து போயிருப்பது வெட்கக்கேடானது என தெரிவித்துள்ளார்
கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் இதே போன்று, வடமாநில இளைஞர்கள் காவல் ஆய்வாளர் உட்பட ஏழு தமிழக காவல்துறையினரைக் கடுமையாகத் தாக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவிற்கு கட்டுக்கடங்காத வன்முறையில் ஈடுபட்டபோதே அதனை நான் கடுமையாக கண்டித்திருந்தேன். அப்போதே தமிழ்நாடு அரசு உரிய கடுமையான நடவடிக்கைகள் எடுத்திருந்தால் தற்போது அம்பத்தூரில் காவலர் ரகுபதி அவர்கள் வட மாநிலத்தொழிலாளர்களால் தாக்கப்பட்டு ஆவடி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவிற்கு பரிதாபகரமான நிலை ஏற்பட்டிருக்காது.