சென்னை: தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதை தொடர்ந்து ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தென் மாநில ஆம்னி பஸ்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இன்று( அக்.,24) மாலை முதல் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்படும் என அந்த அமைப்பு கூறியுள்ளது. அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் 120 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் சிறைபிடித்தனர். மேலும் 2,092 பஸ்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தென் மாநில ஆம்னி பஸ்களின் கூட்டமைப்பு இன்று மாலை 6 மணி முதல் பஸ்கள் இயங்காது என அறிவித்தது. இதனையடுத்து பேச்சுவார்த்தைக்கு வரும்படி அந்த அமைப்பிற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது. சங்கத்தினரும், போக்குவரத்து இணை கமிஷனர் முத்து உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஸ்டிரைக்கை அச்சங்கத்தினர் திரும்ப பெற்றுக் கொண்டனர்.