இந்தியா என்ற பெயரை எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். அதோடு அந்த பெயரைக் கொண்டு ஊடகங்கள் எதிர்கட்சிகள் கூட்டணியை அழைப்பதை தடை செய்ய வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், எதற்காக இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறீர்கள்? தேர்தல் விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டு இருந்தால் தேர்தல் ஆணையத்தில் சென்று முறையிடுங்கள். அதை விட்டுவிட்டு உங்களுக்கு விளம்பரம் வேண்டும் என்றால் அதற்கு நீதிமன்றத்தை பயன்படுத்தாதீர்கள்.
உங்கள் மனுவில் இருந்து ஒன்று மட்டும் தெரிகிறது, உங்களுக்கு உடனடியான விளம்பரம் வேண்டும். ஆனால் அதற்காக இந்த நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்த மனுவை நாங்கள் விசாரிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.