South Indian films are well received all over the world – Director Vetimaaran!
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், திரைப்படத்துறை குறித்தும் தென்னிந்தியத் திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கான காரணம் குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.இதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், “கலைக்கு மொழியில்லை, எல்லைகள் இல்லை என்று கூறுவார்கள். ஆனால், கலைக்கு மொழி, கலாசாரம் போன்ற எல்லைகள் இருக்கின்றன. கலையை நுகர்பவர்களுக்குத்தான் அந்த எல்லைகள் இல்லை. கலை அதன் எல்லைக்குள் இருந்து செயல்படும்போது, அது அதன் எல்லையைக் கடந்துபோகும். அதுதான் இந்த கோவிட் காலங்களில் நடந்தது. ஓ.டி.டி மூலம் நாம் எல்லோரும், எல்லா விதமான படங்களையும் பார்த்தோம். வெவ்வேறு காலங்களில், மொழிகளில், வெவ்வேறு நிலத்தில் நடக்கும் உலக சினிமாக்களை வெவ்வேறு கோணங்களில் பார்த்தோம், ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தோம். அது சினிமா ரசனையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில்தான் சமீபகாலமாகத் தென்னிந்தியத் திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அதற்குக் காரணம் நம் நிலம் சார்ந்த, மொழி சார்ந்த, கலாசாரம் சார்ந்த மக்களுக்கான கதைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இவைதான் தென்னிந்தியப் படங்கள் இப்படியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும், அதன் மிகப்பெரிய வீச்சுக்கும் காரணமாக இருக்கின்றன” என்று கூறினார்.