“சமூக நீதி பேசும் படங்களை எடுத்து சமூக நீதிக்காக போராடுவதும், சமூக நீதிக்கு எதிரானவர்களை எதிர்ப்பதும் தமிழ்நாட்டில் மட்டும்தான் நடக்கிறது. அரசியல் படங்கள் வணிகரீதியான வெற்றி காண்பதும் இங்குதான்!” – வெற்றிமாறன்
உதய், நீங்க நல்லா வேலை பாருங்க. 40 நாள் ஷூட்டிங் போற மாதிரி ஒரு படம் பண்ணுங்க, `மாமன்னன்’ மாதிரி படம் பண்ணுங்க `சைக்கோ’ மாதிரி பண்ணாதீங்க! – மிஷ்கின்
என்னோட இயக்குநர் ராஜ்குமார், ஃபர்ஸ்ட் லுக் வரும்வரை என் முடியோட லுக்கக் காட்டவேணாம். கெட்டப் லாம் சொல்லாதீங்கனு சொல்லிருக்கார் ..அதுவும் கமல் சார் முன்னாடி அப்படிலாம் சொல்லக் கூடாது. ரஹ்மான் சார் , உங்க டான்ஸ் ரொம்ப நல்லா இருக்கு சார். இன்னும் டெலிபோன் மணிபோல் சாங் செம்ம இளமையா இருக்கு… எனக்கு தான் வயசு ஆயிடுச்சு. நானும் மாரி செல்வராஜ் பிரதரும் ஒண்ணா கிரிக்கெட் லாம் விளையாடி இருக்கோம். அப்போ அவர் ஒழுங்காக கிரிக்கெட் ஆடல ..ஆனா எடுத்த படம் எல்லாமே சிக்சர் தான். பரியேறும் பெருமாள், மாரி செல்வராஜ் சிறந்த இயக்குனர் என்று உலகிற்கு எடுத்துரைத்தது. இன்று வெற்றி மாறன் சாருக்கு கிடைத்த வரவேற்பு ஊக்கமளிக்கிறது. மாற்று சினிமாக்கான முயற்சியை எடுத்து கைத்தட்டல்களுக்குச் சொந்தமாகியிருக்கிறார்.அதை தொடங்கியது கமல் சார் தான். விதை கமல் சார் போட்டது தான். உதய் சார் நீங்க விளையாட்டா நடிக்க ஆரம்பிச்சீங்க. இப்போ விளையாட்டுத்துறை அமைச்சரே ஆகிடீங்க! – சிவகார்த்திகேயன்
மாரி செல்வராஜுக்கு இப்படி ஒரு மேடையை அளித்த உதயநிதி ஸ்டாலினிற்கு நன்றி. பரியேறும் பெருமாள் திரைப்படம் பண்ணும் போது எனக்கு பயம் இருந்தது. அது ஏன் என்று தெரியவில்லை. மாரி செல்வராஜின் கலையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என எண்ணினேன். அம்பேத்கர் படத்தை காட்டினால் மதுரை பற்றி எரியும் என்று கூறினார்கள். ஆனால், மக்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டனர். எங்களின் விருப்பம் சரியாக நிறைவேறியது. பரியேறும் பெருமாளின் வெற்றி தான் இவ்வளவு பெரிய வாய்ப்பை மாரி செல்வராஜிற்கு கொடுத்திருக்கிறது. நான் வடிவேலுவின் தீவிர ரசிகன். மாமன்னன் திரைப்படத்தின் சில காட்சிகளை என்னிடம் காட்டினார். மிகவும் சீரியஸாக இருக்கிறது, கொஞ்சம் காமெடியாக எடுத்து செல்லலாமே என்று கூறினேன். இத்திரைப்படத்தில் மிகமுக்கியமான அரசியலை மாரி செல்வராஜ் பேசியிருக்கிறார். – பா.ரஞ்சித்
`துப்பாக்கி’ திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் அதிகளவில் பிரச்னைகள் வந்தன. அவற்றையெல்லாம் உதயநிதி ஸ்டாலின்தான் தீர்த்து வைத்தார். அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்! – ஏ.ஆர்.முருகதாஸ்
இந்த பாடலை முதலில் உதயநிதி சார் தான் ஆசைப்பட்டார். சென்று பார்த்தால், ஹேர் பின் பெண்டு போன்று பல வளைவுகள் இருந்தது. பாடல் பாடுவதற்கு ஸ்டூடியோவிற்குள் அனுப்பினார்,உள்ளே அதிகமாக வியர்த்தது, கீழே வாலி தான் இல்லை. இருந்திருந்தால் அது நிறைஞ்சிருக்கும். ரஹ்மான் பாடலை பாடினார். அதை கேட்டு அசந்துவிட்டேன். தரையில் நினைத்ததையெல்லாம் திரையில் நடிப்பதற்கு கமல் சாரிடம் தான் கற்றுக்கொண்டேன். மொத்த படத்தையும் நான் பாடுன ஒத்த பாட்டுல சொல்லிட்டாரு மாரி செல்வராஜ். நான் இன்னும் படத்தை பார்க்க வில்லை, கமல் சார் பார்த்துவிட்டு நன்றாக வந்திருக்கிறது எனக் கூறினார். இத்திரைப்படத்தின் உண்மையான மாமன்னன் மாரி செல்வராஜ் தான். கமல் சார் தயாரிப்பில் அந்த ஒரு படத்தை மட்டும் உதயநிதி நடிக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள். அந்த கதை அற்புதமானது” என்று பேசியுள்ளார். – வடிவேலு
இது மாரி அரசியல் என்று உதயநிதி கூறினார். இது நம் அரசியல். எனக்கு சிறு வருத்தம், என் படத்தை அவர் பண்ணவில்லை. இருந்தாலும் இதுவும் என் படம் தான். தேவர் மகனில் வடிவேலுவைப் பார்த்து இந்தக் கதாபாத்திரத்திற்கு இவர் சரியாக இருப்பாரா எனக் கேட்டார்கள். அதில் அற்புதமாக நடித்தார். எல்லோரும் கீர்த்தி சுரேஷ் அழகாக இருப்பதாகக் கூறினார்கள். இன்று அழகிற்கு அலங்காரம் செய்து கொள்கிறார்கள். அது மட்டும் போதாது அழகுடன் அறிவும் இருந்தால் அது கூடுதல் அழகாக இருக்கும். அது கீர்த்தி சுரேஷிடம் இருக்கிறது. நான் இந்த விழாவை என் தோளில் தாங்குகிறேன். சமூக நீதிக்கானப் பேச்சு தொடர்ந்து நிகழ வேண்டும் – கமல்ஹாசன்.
வடிவேலு சார் கதாபாத்திரம் தான் படத்தின் உயிர். என்னுடையக் கடைசி படம் என்று கூறி தான் மாரி செல்வராஜ், ரஹ்மான் சார், வடிவேலு சார், கீர்த்து சுரேஷிடம் டேட்ஸ் வாங்கினேன். அதன் பிறகு கமல் சார் தயாரிப்பில் நடிக்கப் போறேன் என தெரிந்த பின்பு மாரி செல்வராஜ் கோவப்பட்டார். படத்தை 110 நாட்கள் எடுத்து எடிட் செய்த பிறகு மீண்டும் மூன்று நாட்கள் ஷூட்டிங் போவோமா என்று கேட்டார். அதன் பிறகு மீண்டும் நேற்று இன்னும் ஒரு நாள் ஷூட்டிங் பண்ணலாமனு என்று கேட்டார். இந்த பஞ்சாயத்தை இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு வைத்து கொள்வோம் என்று கூறினேன். 3 வருடங்களுக்குப் படம் நடிக்க வாய்ப்பில்லை. அதன் பிறகு நடித்தாலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில்தான் நடிப்பேன். – உதயநிதி
இத்திரைப்படத்தின் கதை படமாகுமா என்று சந்தேகம் முதலில் இருந்தது. இப்போது அது கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதலில், ரெட் ஜெயன்ட்டில் படம் இயக்கப் போகிறீர்கள். உங்களுக்கு அங்கு உள்ள செண்பக மூர்த்திக்கு ஒத்துப்போக வாய்ப்பே கிடையாது என கூறினார்கள். இப்போது வரை ஒரு நாள் ஷூட்டிங் கேட்கும் அளவிற்கு என்னை பார்த்துக்கொண்டார்கள். உயிரே திரைப்படத்தை திரையரங்கத்தில் ரஹ்மான் சார் பாடல்களை கேட்ட பின்பு, `தய்ய தய்யா’ பாடலை பாடிக்கொண்டு ஆடு, மாடுகளை மேய்தேன். மாமன்னன் கதாபாத்திரத்தை எனது தந்தையை வைத்து தான் வடிவமைத்தேன். மாமன்னன் படம் உருவாகுவதற்கு `தேவர் மகன்’ ஒரு காரணம். அந்த படத்தில் வரும் சின்ன தேவர், பெரிய தேவர் கதாபாத்திரங்களில் என் தந்தை இருந்தால் எப்படி இருக்கும் என யோசிச்சுதான் இந்த கதையை வடிவமைத்தேன். – மாரி செல்வராஜ்