தென்னக இரயில்வே மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான குறை தீர்ப்பு முகாம் மதுரை ரயில்வே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மதுரை ரயில் நிலையத்தில் தூய்மை ஒப்பந்த பணியாளர்களை கைகளால் மலம் அள்ள வைப்பதாக வீடியோ ஆதாரத்துடன் ஒப்பந்த பணியாளர் காதர் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசனிடம் புகார் அளித்தார்.
இது குறித்து தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் பேசுகையில்
ரயில்வேயில் கைகளால் மலம் அள்ளுவது தடை செய்யப்பட்டது என அறிவிக்கப்பட்டது. ஆனால் கைகளால் மலம் அள்ளுவது தொடர்பான வீடியோ ஒன்றை பார்த்தேன். கைகளால் மலம் அள்ளுவது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். உண்மை இருக்கும் பட்சத்தில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு ஒப்பந்தகாரர் மீது வழக்கு பதியப்படும். என உறுதியளித்தார்.