ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், பரிசல் இயக்கவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.காவிரியில் தண்ணீர் உடனடியாக திறக்க வேண்டும் என கர்நாடகாவிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வந்தது. ஆனால் தண்ணீர் திறக்காமல் கர்நாடகா அரசு போக்கு காட்டியது. இந்நிலையில் காவிரி நீரிபிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளா மாநிலம் வயநாட்டில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு வரும் நீரின் அளவு பன்மடங்கு உயர்ந்தது.
இதனையடுத்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி 20000 கன அடியாக இருந்தது. மாலையில் 18000 அடியாக குறைந்தது. இந்நிலையில் இன்று காலையில் நீர்வரத்து 20,000 கனஅடியாக மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் ஆற்றில் 3-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.