குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டதை தொடர்ந்து, ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று, மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை விநியோகித்து வருகின்றனர்.இந்நிலையில், இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய தமிழ்நாடு முழுவதும் 36 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாமை, தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, விண்ணப்பதாரர்களிடம் விவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1989ஆம் ஆண்டு தருமபுரியில் கருணாநிதி விதைத்த மகளிர் சுய உதவி குழு திட்டம் தற்போது 4 லட்சத்து 57 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களாக உருவெடுத்துள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் தான் துணை முதலமைச்சராக, உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது சுழல் நிதி, வங்கி கடன் வழங்கினோம். அரசு நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் அரசு திட்டங்களை துவங்கி வைக்கும் போது பயனாளிகள் சிலருக்கு மட்டுமே உதவிகள் வழங்படும். ஆனால் நான் எல்லோருக்கும் உதவிகளை வழங்கிவி்ட்டு செல்வேன்.மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்படுவதாக குற்றம்சாட்டினார். பெண்கள் தன்னம்பிக்கையுடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதற்காகவே மகளிர் உரிமை தொகை திட்டம் கொண்டுவரப்பட்டதாக கூறிய அவர், மாதம் ஆயிரம் ரூபாய் என்பது உதவித்தொகை அல்ல உரிமைத் தொகை என குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த திட்டத்திற்காக அடுத்தாண்டு 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் அறிவித்தார்.