தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால். இவர் தற்போது ‘லத்தி’ படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட பல மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையடுத்து, நடிகர் விஷாலின் 34-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளிவந்தது.
‘தாமிரபரணி’, ‘பூஜை’ போன்ற படங்களில் வெற்றி கூட்டணியான விஷால் மற்றும் இயக்குநர் ஹரியை மீண்டும் இணைத்து ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது. எம்.சுகுமார் ஒளிப்பதிவில், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியளிக்க பாடலாசிரியர் விவேக் பாடல் எழுத உள்ளார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிர்சாந்த் இசையமைக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.