அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் வரவேற்பை பெற்றது.
7 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாம்.சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், டிமான்டி காலணி படத்தில் தனக்கான காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டு விட்டதாக அருள்நிதி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் படத்தின் 98சதவீத படப்பிடிப்புப் பணிகள் முடிந்து விட்டதாகவும் இன்னும் ஒரு சில காட்சிகளே மீதியிருப்பதாகவும், அதுவும் ஓரிரு நாட்களில் முடிந்து விடும் அவர் கூறினார் எனினும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது, டிமான்டி காலணி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதை படக்குழு மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர். இந்த திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக இருப்பதாகவும், செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் எனவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தனர்.