அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் விலைவாசி உயர்வை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் ஜூன் 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:2021 சட்டமன்ற தேர்தலின்போது, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு வகைகளில் ஊழல்களைப் புரிந்து மக்கள் விரோத அரசாக இருந்து வருகிறது.திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி, குடிநீர், கழிவு நீர் இணைப்பு கட்டணங்களை உயர்த்தி மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்குக் கூட மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை உடனடியாக நீக்க வேண்டும் என்று, நேற்று (15.06.2023) அதிமுக சார்பில் ஆளுநரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் லஞ்ச வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், அதிமுக சார்பில், வரும் 21ஆம் தேதி 10 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.