ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இதயத்தின் வலது புறத்தில் 90 சதவீதமும், இடது புறத்தில் 80 சதவீதமும் அடைப்பு உள்ளது என்று தெரியவந்துள்ளது.
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு 160/100 என்ற அளவில் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. இதனையடுத்து, ஐசியுவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில், அவர் இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
அதில், ‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ( வயது 47) ரத்தநாள பரிசோதனை நேற்று காலை 10.40 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. அப்பரிசோதனையில் மூன்று முக்கியமான குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது” என ஓமந்தூரார் மருத்துவமனை விளக்கமளித்துள்ளது. செந்தில் பாலாஜி தரப்பில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைப் பெறுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
இந்தநிலையில், ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இதயத்தின் வலது புறத்தில் 90 சதவீதமும், இடது புறத்தில் 80 சதவீதமும் அடைப்பு உள்ளது என்று தெரியவந்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு ரத்தக் கட்டுகளைத் தவிர்க்கும் ஹெப்பரேன் ஊசி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அடைப்பு தீவிரமாக இருக்கும் நிலையில், ஸ்ண்டன்ட் பொறுத்துவதற்கான வாய்ப்பு இல்லை.