ஆர்ஜே.தமிழ்மணி சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மதுரை அருகே உள்ள கோவில்பாப்பாகுடியில் உள்ள மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை அதிமுக மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் .
அப்போது பேசிய அவர், ’நேற்றிரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை விமான நிலையத்தை விட்டு வெளியே வரும்போது கரண்ட் கட் ஏற்பட்டது. இது வழக்கமான ஒன்று தான். திமுக அரசு வந்தால் இதுதான் நிலைமை. இருளில் முழ்கி உள்ளது விடியா அரசு.
திமுக என்ற கரடியிடம் மாட்டி கொண்டு தமிழக மக்கள் தற்போது திண்டாடுகின்றனர். மின் கட்டண உயர்வு, தொழிற்சாலைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதை மறைப்பதற்கு தான் கரடி கதை. ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக சிறப்பாக. செயல்படுகிறது. ஒற்றை தலைமையின் கீழ் வருகிற தேர்தலில் வெற்றி வாகை சூடும்.
பாஜகவுக்கு அதிமுக பல்லக்கு தூக்குகிறது என மு.க.ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜகவுக்கு முதன்முதலில் பல்லக்கு தூக்கியது திமுக தான். அவர்கள் மத்திய பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர். பதவிகளை அனுபவித்தனர்.