
கடந்த 2018 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க மாநாட்டிற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அரசு அனுமதி வழங்காததால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்காக, ரகுமானுக்கு வழங்கப்பட்ட 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருப்பி கேட்டபோது, அவர் பின்தேதியிட்ட வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்ததால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கறிஞர் மூலமும் ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இது தொடர்பாக, ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் அந்த அமைப்புடன் ரகுமான் எவ்விதத்திலும் தொடர்பிலோ, ஒப்பந்தத்திலோ இல்லாத நிலையில், மலிவான விளம்பரத்திற்காக இதுபோன்ற குற்றச்சாட்டை கூறி உள்ளார்கள் என்று கடுமையாக சாடியுள்ளார். தனக்கு கொடுத்ததாக கூறப்படும் பணத்தை தான் பெறவில்லை என ரகுமான் கூறுவதாகவும், மூன்றாவது நபரிடம் பணத்தை கொடுத்துள்ள இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சங்கம் தேவையில்லாமல் ரகுமான் பெயரை இதில் ஈடுபடுத்தி உள்ளது என்றும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரகுமானுக்கு அனுப்பிய நோட்டீசை 3 நாட்களில் திரும்பப்பெற வேண்டும் என்றும், பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமானுக்கு சமூகத்தில் உள்ள நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடாக 10 கோடி ரூபாயை தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர், தவறினால் சட்ட ரீதியாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.